எப்போதும்
பயணிகளோடு
என் ஏக்கத்தையும் நிரப்பி
செல்கிறது
குளிர்சாதான பேருந்து,
என் இயலாமையை
உள்ளிழுத்துக்கொண்டு
சிரிக்கிறது
வணிகவளாகத்தின் விலை அட்டை,
ஏளனமாய்த்தான்
தோன்றுகிறது
உணவகத்தின் கண்ணாடி சுவருக்குள்
யுவதியின் விழிகள்,
சிநேகம் பாவிக்க
மறுக்கின்றன
எனது காலணியோடு
வழுக்கு தரைகள்,
பெரும்பாலும்
வாட்ச்மேனோடே
முடிந்து விடுகின்றன
எனது நேர்முகத்தேர்வுகள்,
ஆனாலும் இந்நகரம்
எனக்கும் வைத்திருக்கிறது
பத்து ரூபாய்க்கு இரண்டு தோசையும்
இராசனாய் நகர்வலம் வர
ஐம்பது ரூபாய் டிக்கெட்டும் ...
No comments:
Post a Comment