Tuesday, June 2, 2015

அன்று

இந்த சிறுகதை எழுத்தாளர் சரவண கார்த்திகேயனால் நடத்தப்படும் தமிழ் மின்னிதழில் மே மாதம் வெளியானது

______________________________________________

“என்ன தம்பி ஆபிஸ்லருந்து சீக்கிரம் கிளம்பிட்ட போல?”,


“உள்ள ஏறி வாங்க, இல்லாட்டி இறங்கிக்கோங்க”,


“சார், இந்த பேக கொஞ்சம் வச்சிக்க முடியுமா?”,


”இடிக்காம நில்லுப்பா”,


“பெருங்குடிலருந்து பஸ்ல வந்தினுருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்”


“பல்லாவரம் போகுமா?”


மேற்கண்ட உரையாடலைலாம் பாத்ததும் இது ஒரு பேருந்து பயணம் சம்பந்தமான கதைன்னு நினைச்சிருப்பிங்க. அப்படித்தான் நானும் நினைச்சிருந்தேன் அவன் (இல்லை இல்லை இப்போதைக்கு அவர்),  அவர் வந்து எம்பக்கத்துல உக்காரும் வரை. இது வரைக்கும் படிச்சதிலிருந்து உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நான் தேவையில்லாம எதையும் சொல்ல மாட்டேன்னு அதானால அவர் எப்படி இருந்தார்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்காதீங்க.


சிவராஜ் வைத்திய பரம்பரைல எப்படி வரிசையா ஆம்பள பசங்களாவே பொறக்குறாங்கன்னு பயங்கரமா யோசிச்ட்ருக்கும்போது தான். “எங்கருந்து தம்பி வர்றீங்க” அவர்  குரல்,


“கந்தன் சாவடி சார்”,


சரி நாமளும் கேட்டு வைப்போம் “நீங்க எங்கிருந்து சார் வர்றீங்க?”,


“ஜெயில்ல இருந்து தம்பி”,


இங்க நான் அதிர்ச்சியடைஞ்சிருப்பேன்னு நீங்க நினைச்சிருப்பிங்க இல்ல எனக்கு இதெல்லாம் பழகிடிச்சி, சத்தியமா இந்த ஏரியாலா ஜெயிலே இல்ல, கண்டிப்பா இவரும் என்னை மாதிரி ஒரு ஐடி கம்பனிலருந்து தான் வந்திருக்கனும் அத தான் கிண்டலா சொல்றானாம்னு இதலாம இன்னும் சோக்குன்னு நினைச்சிட்ருக்காங்கன்னு நான்  நினைச்சிக்கிட்டேன். சரி எதாவது கேட்டு வைப்போம்.  


“ஏன் சார் ஜெயிலுக்கு போனிங்க?”


“ஒருத்தன கொல செஞ்சிட்டேன் அதான்”


(கொலகாரனா? ஒரு வேள நிஜமத்தான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்றாரோ?, இங்க இருந்து இனிமே அவர் இல்ல அவன் )


”எதுக்கு?””
கொடுத்த கடன திருப்பி கேட்டு ஒரே தொல்லை அதான்”.


“இப்போ யார சார் பாக்க போறீங்க?”


“தெரியலப்பா””ஏன் சார் வீட்லலாம் இல்லையா?”


”நான் ஜெயிலுக்கு போம்போது  பொண்ட்டியும் ,பையனும் இருந்தாங்கப்பா”


என்னது இருந்தாங்களா , அவங்களையும் இவரே எதாச்சும் செஞ்சிட்டாரா என யோசிப்பதற்குள் நடத்துனர் வந்துட்டார் டிக்கெட் கேட்க.


இந்த நேரத்துல எனக்கும், நடத்துனருக்கும் நடந்த உரையாடல் தேவையற்றது -


10 ரூபாயை நீட்டி “பெருங்களத்தூர் ஓண்ணு”


“3 ரூவா தாப்பா” “சில்லறை இல்லண்ணா”


”தம்பி டிக்கெட் 13 ரூபா”.


அவனே பேச ஆரம்பிச்சான்


“ஒரு தரம் என் பையன் பஸ்ல வந்திட்ருந்தான், அவன் பக்கத்துல உக்காந்திட்ருந்தவர் முகம் வேர்த்து போயிருக்க இவன் ஏன் சார்னு கேட்ருக்கான் , உன்ன பாத்தா நல்லவனா தெரியுது நான் ஒரு திருடன் தம்பி, கொஞ்சம் காசு திருடி பையில வச்சிருக்கேன் ,போலிஸ் துரத்துதுன்னு சொல்லிருக்கார் , கொஞ்ச நேரம் கழிச்சி தம்பி இந்த பணத்த கொஞ்ச நாள் வச்சிருக்க முடியுமா , நான் வந்து வாங்கிக்கிறேன் , கால்வாசி உனக்கு தர்றேன்னிருக்கார், இவனும் சரின்னு வாங்கிக்கிட்டான் , மறுநாளே வீட்ல ரத்தம் கக்கி செத்துட்டாம்ப்பா””


தாங்க முடியலடா சாமி இவன் பேசுறதுன்னு , பேருந்தோட சன்னல் வழியா எட்டி குதிச்சிடலாம் பார்த்தேன், பின்னாடி ஒருத்தன் அவன் பொண்டாட்டியோட (  இந்தாளு சொல்ற கதையே நம்புற நீங்க , அந்த வண்டிக்காரனோட வர்றது அவன் பொண்டாட்டி தான்னு நம்புவிங்கன்னு எனக்கு தெரியும் ) வண்டில வர்றத பாத்துட்டு முடிவ மாத்திக்கிட்டேன்.


அப்போ தான் அந்த சுவரொட்டியையும் பாத்தேன் ரேஷ்மாவின் “ரகசியம் ”, நேஷ்னல் திரையரங்குல போட்ருக்காங்க, போன வாரம் ரேஷ்மா நடிச்ச “இளமைக்கன்னி” போட்ருந்தாங்க , தொடர்ந்து ரேஷ்மா நடிச்ச படமாவே போடுறதோட காரணத்த கண்டுபிடிக்கனும்.


அவங்கம்மாக்கு என்னாச்சின்னு நான் கேக்கலைனாலும்,  இது அவரோட மனைவி பத்தின விசயம்ங்குறதால திரும்பவும் அவரே தான் சொல்ல ஆரம்பிச்சார்.  


”ஒரு நாள் என் பொண்டாட்டி பஸ்ல வந்திட்ருந்தா தம்பி, அவ பக்கத்துல ஒருத்தன் வந்து உட்கார்ந்தான், மாமண்டூர் ஓட்டல்ல பஸ் நிக்கும்போது அவன் ஒரு பைய என் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து பாத்துக்கோங்க டீ சாப்பிட்டு வந்துடுறேன்னு சொன்னான், போனவன் திரும்ப வரவே இல்ல. என் பொண்டாட்டி பைய எடுத்துக்கிட்டு வந்துட்டா. அன்னைக்கு சாயந்தரமே அவ ரத்தம் கக்கி செத்துட்டாப்பா, அவன் யாருன்னு தெரியல ஆனா அந்த பஸ்ல கூட வந்தவனுங்க  ரெண்டு பேருக்கும் கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்தது அத வச்சித்தான் என் பையன்,பொண்டாட்டி கூட உக்காந்து வந்தது ஒரே ஆள் தான்னு கண்டுபிடிச்சேன், இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் ஒருத்தன கொன்னேன்ல அவனுக்கும் அதே மாதிரி கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்ததுப்பா”


இன்னும் கொஞ்சம் நேரம், இவன் பேசினா நாம தான் ரத்தம் கக்கி சாகனும்னு நினைக்கும்போது ஒரு சந்தேகம்,


ஆமா நீங்க தான் ஜெயில்ல இருந்திங்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்னு கேக்கலாம்னு வாயெடுக்குறேன்.


அவன் “தம்பி கீழ 100 ரூவா நோட்டு விழுந்து கிடக்குதே உங்களுதா பாருங்க”,


இந்திய பொருளாதாரத்த காப்பாத்துறதுக்காக 50 பைசா கீழ இருந்தாலே அத எடுத்து புழக்கத்துல விடுற எனக்கு அத என்னுதுன்னு சொல்லத்தான் வாய் வரும்னு தெரியாமலே கேக்குறான் லூசுப்பய, சரி அத மொதல்ல எடுத்துக்கிட்டு அப்புறம் நம்ம சந்தேகத்த கேப்போம்னு நினைச்சிக்கிட்டு குனிஞ்சி எடுத்துட்டு பாக்குறேன் அவன் பஸ்ஸ விட்டு இறங்கி போயிட்டே இருக்கான்.

இப்பத்தான் தோணுது. அவனுக்கும் கழுத்துல சின்னதா தழும்பு இருந்தா மாதிரித்தானிருக்கு …………...