Tuesday, June 2, 2015

அன்று

இந்த சிறுகதை எழுத்தாளர் சரவண கார்த்திகேயனால் நடத்தப்படும் தமிழ் மின்னிதழில் மே மாதம் வெளியானது

______________________________________________

“என்ன தம்பி ஆபிஸ்லருந்து சீக்கிரம் கிளம்பிட்ட போல?”,


“உள்ள ஏறி வாங்க, இல்லாட்டி இறங்கிக்கோங்க”,


“சார், இந்த பேக கொஞ்சம் வச்சிக்க முடியுமா?”,


”இடிக்காம நில்லுப்பா”,


“பெருங்குடிலருந்து பஸ்ல வந்தினுருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்”


“பல்லாவரம் போகுமா?”


மேற்கண்ட உரையாடலைலாம் பாத்ததும் இது ஒரு பேருந்து பயணம் சம்பந்தமான கதைன்னு நினைச்சிருப்பிங்க. அப்படித்தான் நானும் நினைச்சிருந்தேன் அவன் (இல்லை இல்லை இப்போதைக்கு அவர்),  அவர் வந்து எம்பக்கத்துல உக்காரும் வரை. இது வரைக்கும் படிச்சதிலிருந்து உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நான் தேவையில்லாம எதையும் சொல்ல மாட்டேன்னு அதானால அவர் எப்படி இருந்தார்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்காதீங்க.


சிவராஜ் வைத்திய பரம்பரைல எப்படி வரிசையா ஆம்பள பசங்களாவே பொறக்குறாங்கன்னு பயங்கரமா யோசிச்ட்ருக்கும்போது தான். “எங்கருந்து தம்பி வர்றீங்க” அவர்  குரல்,


“கந்தன் சாவடி சார்”,


சரி நாமளும் கேட்டு வைப்போம் “நீங்க எங்கிருந்து சார் வர்றீங்க?”,


“ஜெயில்ல இருந்து தம்பி”,


இங்க நான் அதிர்ச்சியடைஞ்சிருப்பேன்னு நீங்க நினைச்சிருப்பிங்க இல்ல எனக்கு இதெல்லாம் பழகிடிச்சி, சத்தியமா இந்த ஏரியாலா ஜெயிலே இல்ல, கண்டிப்பா இவரும் என்னை மாதிரி ஒரு ஐடி கம்பனிலருந்து தான் வந்திருக்கனும் அத தான் கிண்டலா சொல்றானாம்னு இதலாம இன்னும் சோக்குன்னு நினைச்சிட்ருக்காங்கன்னு நான்  நினைச்சிக்கிட்டேன். சரி எதாவது கேட்டு வைப்போம்.  


“ஏன் சார் ஜெயிலுக்கு போனிங்க?”


“ஒருத்தன கொல செஞ்சிட்டேன் அதான்”


(கொலகாரனா? ஒரு வேள நிஜமத்தான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்றாரோ?, இங்க இருந்து இனிமே அவர் இல்ல அவன் )


”எதுக்கு?””
கொடுத்த கடன திருப்பி கேட்டு ஒரே தொல்லை அதான்”.


“இப்போ யார சார் பாக்க போறீங்க?”


“தெரியலப்பா””ஏன் சார் வீட்லலாம் இல்லையா?”


”நான் ஜெயிலுக்கு போம்போது  பொண்ட்டியும் ,பையனும் இருந்தாங்கப்பா”


என்னது இருந்தாங்களா , அவங்களையும் இவரே எதாச்சும் செஞ்சிட்டாரா என யோசிப்பதற்குள் நடத்துனர் வந்துட்டார் டிக்கெட் கேட்க.


இந்த நேரத்துல எனக்கும், நடத்துனருக்கும் நடந்த உரையாடல் தேவையற்றது -


10 ரூபாயை நீட்டி “பெருங்களத்தூர் ஓண்ணு”


“3 ரூவா தாப்பா” “சில்லறை இல்லண்ணா”


”தம்பி டிக்கெட் 13 ரூபா”.


அவனே பேச ஆரம்பிச்சான்


“ஒரு தரம் என் பையன் பஸ்ல வந்திட்ருந்தான், அவன் பக்கத்துல உக்காந்திட்ருந்தவர் முகம் வேர்த்து போயிருக்க இவன் ஏன் சார்னு கேட்ருக்கான் , உன்ன பாத்தா நல்லவனா தெரியுது நான் ஒரு திருடன் தம்பி, கொஞ்சம் காசு திருடி பையில வச்சிருக்கேன் ,போலிஸ் துரத்துதுன்னு சொல்லிருக்கார் , கொஞ்ச நேரம் கழிச்சி தம்பி இந்த பணத்த கொஞ்ச நாள் வச்சிருக்க முடியுமா , நான் வந்து வாங்கிக்கிறேன் , கால்வாசி உனக்கு தர்றேன்னிருக்கார், இவனும் சரின்னு வாங்கிக்கிட்டான் , மறுநாளே வீட்ல ரத்தம் கக்கி செத்துட்டாம்ப்பா””


தாங்க முடியலடா சாமி இவன் பேசுறதுன்னு , பேருந்தோட சன்னல் வழியா எட்டி குதிச்சிடலாம் பார்த்தேன், பின்னாடி ஒருத்தன் அவன் பொண்டாட்டியோட (  இந்தாளு சொல்ற கதையே நம்புற நீங்க , அந்த வண்டிக்காரனோட வர்றது அவன் பொண்டாட்டி தான்னு நம்புவிங்கன்னு எனக்கு தெரியும் ) வண்டில வர்றத பாத்துட்டு முடிவ மாத்திக்கிட்டேன்.


அப்போ தான் அந்த சுவரொட்டியையும் பாத்தேன் ரேஷ்மாவின் “ரகசியம் ”, நேஷ்னல் திரையரங்குல போட்ருக்காங்க, போன வாரம் ரேஷ்மா நடிச்ச “இளமைக்கன்னி” போட்ருந்தாங்க , தொடர்ந்து ரேஷ்மா நடிச்ச படமாவே போடுறதோட காரணத்த கண்டுபிடிக்கனும்.


அவங்கம்மாக்கு என்னாச்சின்னு நான் கேக்கலைனாலும்,  இது அவரோட மனைவி பத்தின விசயம்ங்குறதால திரும்பவும் அவரே தான் சொல்ல ஆரம்பிச்சார்.  


”ஒரு நாள் என் பொண்டாட்டி பஸ்ல வந்திட்ருந்தா தம்பி, அவ பக்கத்துல ஒருத்தன் வந்து உட்கார்ந்தான், மாமண்டூர் ஓட்டல்ல பஸ் நிக்கும்போது அவன் ஒரு பைய என் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து பாத்துக்கோங்க டீ சாப்பிட்டு வந்துடுறேன்னு சொன்னான், போனவன் திரும்ப வரவே இல்ல. என் பொண்டாட்டி பைய எடுத்துக்கிட்டு வந்துட்டா. அன்னைக்கு சாயந்தரமே அவ ரத்தம் கக்கி செத்துட்டாப்பா, அவன் யாருன்னு தெரியல ஆனா அந்த பஸ்ல கூட வந்தவனுங்க  ரெண்டு பேருக்கும் கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்தது அத வச்சித்தான் என் பையன்,பொண்டாட்டி கூட உக்காந்து வந்தது ஒரே ஆள் தான்னு கண்டுபிடிச்சேன், இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் ஒருத்தன கொன்னேன்ல அவனுக்கும் அதே மாதிரி கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்ததுப்பா”


இன்னும் கொஞ்சம் நேரம், இவன் பேசினா நாம தான் ரத்தம் கக்கி சாகனும்னு நினைக்கும்போது ஒரு சந்தேகம்,


ஆமா நீங்க தான் ஜெயில்ல இருந்திங்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்னு கேக்கலாம்னு வாயெடுக்குறேன்.


அவன் “தம்பி கீழ 100 ரூவா நோட்டு விழுந்து கிடக்குதே உங்களுதா பாருங்க”,


இந்திய பொருளாதாரத்த காப்பாத்துறதுக்காக 50 பைசா கீழ இருந்தாலே அத எடுத்து புழக்கத்துல விடுற எனக்கு அத என்னுதுன்னு சொல்லத்தான் வாய் வரும்னு தெரியாமலே கேக்குறான் லூசுப்பய, சரி அத மொதல்ல எடுத்துக்கிட்டு அப்புறம் நம்ம சந்தேகத்த கேப்போம்னு நினைச்சிக்கிட்டு குனிஞ்சி எடுத்துட்டு பாக்குறேன் அவன் பஸ்ஸ விட்டு இறங்கி போயிட்டே இருக்கான்.

இப்பத்தான் தோணுது. அவனுக்கும் கழுத்துல சின்னதா தழும்பு இருந்தா மாதிரித்தானிருக்கு …………...

Tuesday, March 31, 2015

அரசூர் வம்சம்

எந்த ஒரு இனத்துக்கும், சமூகத்திற்கும் மிகக்கடினமான விடயம் தங்கள் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது. இப்படி பாதுகாக்கவோ கடத்தவோ முடியாமல் அழிந்து போன இனம், மொழி பல. ஆனால் அப்படி தங்கள் கலச்சாரத்தை பாதுகாத்து கொள்ளும் இனங்கள் தனித்து நிற்கும். விமர்சனம் எத்தனையோ இருந்தாலும் யூதர்களை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே இது தான். யூத மதத்தில் மதம் மாறுதல் என்ற ஒன்றே இல்லை பிறப்பால் மட்டுமே யூத மதத்தினராய் இருக்க முடியும் அப்படி இருந்தும் அரசியல் நெருக்கடிகள், யூத மதத்திலிருந்து பிற மதத்திற்கு மதமாற்றங்கள், உலகம் முழுக்க எப்போதும் விரட்டியடிப்பு என பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் யூத பண்பாடு, கலாச்சாரம் என்ற ஒன்றை எப்போதும் அவர்கள் விட்டுக்கொடுத்ததேயில்லை. அதனால் தான் இன்று இஸ்ரேல் என்ற தனி நாடு அவர்களுக்கு கிட்டியது.

அரசூர் வம்சம் சுமார் 150-200 வருடம் முன்னர் நடக்கும் கதை. வாரிசில்லா, அதிகாரமில்லா ராஜாவும் , அவர் அரண்மனை அருகே வசிக்கும்  ராஜாவை விட வசதியான  புகையிலை விற்கும் பிராமணக்குடும்பமும் தான் கதைக்களம்.

இருத்தல் வேண்டி புகையிலை விற்கிறது பிராமணக்குடும்பம், தங்கள் தொழில் இதுவல்ல என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாமல் இல்லை ஆனால் மிகச்சாதரணமாக கடந்து போகின்றனர். மெத்த படித்து சித்தம் கலங்கிய சாமி நாதன், கொட்டக்குடி தாசியின் நினைப்பில் திரியும் சங்கரன், வெள்ளைக்காரியுடன் உறவு கொள்ளும் பிராமணன், காசுக்கு உணவு விற்கும் பிராமணன், ஈமக்கிரியைகள் செய்வதே வாழ்க்கையாகிப்போனதே எனக்கலங்கும் பிராமணன், வேதமாவது ஒன்றாவது என படித்து முடித்து ஆங்கிலேயனிடம் வேலைக்கு செல்லும் பிராமணன், வட்டியில்லாமல் கடன் கிடைக்கிறதே என மதம் மாறும் பிராமணன்  என நாவல் முழுதும் பல்வேறு காரணிகளால் தங்கள் பண்பாட்டை காப்பாற்ற முடியாமல் சிதறுன்னுடு போகும் காலமாற்றத்தை புனைவின் வழியே சொல்கிறது நாவல்.

நாவலின் ஆரம்பத்தில் ராஜவைப்பற்றிய  வரிகளை படித்ததும் மனதில் விரிந்தது போருக்கு படை, பரிவாரத்தோடு போகும் கம்பீர ராஜ ஆனால் இந்த ராஜாவோ அதிகாரத்தையெல்லாம் ஆங்கிலேயர் பிடிங்கி கொள்ள, மிச்சமீதியாவாது காப்பாற்றிக்கொள்ள தனக்கு ஒரு வாரிசு வேண்டி கிடக்கும் ராஜா. தன் வேலையாட்களுக்கு கூட சம்பளம் தர முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கிடக்கும் ராஜா.

இப்படி கனமான பாத்திரங்கள், கனமான நிகழ்வுகள் கொண்ட கதை சோகமாய் செல்கிறதா என்றால் இல்லை. அவர்களை கண்டு பரிதாபப்படுகிறாரா , பகடி செய்கிறாரா என தெரியாத எழுத்து. அவற்றை நம் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.

சுவாரசியமான பாத்திரங்கள் பல

பனியன் சகோதரர்கள் - இந்நாவலை காலத்தின் குறுக்காய் காட்சிப்படுத்தும் இரண்டு பேர், மின்னணு பொருட்களை காண்பித்து காசு பார்க்கிறார்கள், அத்தனையும் அடகில் மூழ்கிப்போக காலம் அவர்களை இறந்த காலத்திலையே நிறுத்தி வைக்கிறது.

கிட்டவய்யன் - எதோ ஒரு பிராமணன் கிறிஸ்தியனுடன் சம்பந்தம் வைத்தான் என்பதால் ஒரு வம்சத்தையே ஒதுக்கி வைக்கின்றனர். அதில் ஒருவன் உணவு கேட்டு வரும்போது எட்டி உதைக்கிறார் கிட்டவய்யன். முடிவில் உணவுக்கடை வைக்க வட்டி இல்லாமல் கடன் கிடைக்கிறது என்பதற்காக கிறிஸ்தியனாக மாறுகிறார்.

முன்னோர்கள் - கதை மாந்தரிடம் ,அவ்வப்போது முன்னோர்கள் வந்து அறிவுரைகளையும், தங்கள் தேவைகளையும் சொல்லுகின்றனர் முக்கியமாய் ராஜாவிடமும். முன்னோர்கள் எனும் பாத்திரங்களை நான் மாந்தர்களின்  மனசாட்சி என எடுத்துக்கொண்டேன். இப்படி பலர்.

தீவிர வாசிப்பில் இருக்கும் ஒருவருக்கு அரசூர் வம்சம் நல்ல வாசிப்பனுவத்தை கொடுக்கும், புதுதாய் படிப்பவர்கள் மொழி நடையில் சற்று தடுமாறிப்போனாலும் சுதாரித்துக்கொள்ளலாம்.

460 பக்க நாவல், முதல் சில அத்தியாயம் படிக்க நேரம் எடுத்தாலும் அடுத்து நாவல் நம்மை உள்வாங்கி கொண்டது. நாவலின் காலத்தை போல் பக்கங்களும் பறக்க தொடங்கிவிட்டன.


அரசூர் வம்சம், இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

இணையத்தில் வாங்க: http://nhm.in/printedbook/103/Arasur%20Vamsam

Monday, March 2, 2015

நகரம்

எப்போதும்
பயணிகளோடு
என் ஏக்கத்தையும் நிரப்பி
செல்கிறது
குளிர்சாதான பேருந்து,

என் இயலாமையை
உள்ளிழுத்துக்கொண்டு
சிரிக்கிறது
வணிகவளாகத்தின் விலை அட்டை,

ஏளனமாய்த்தான்
தோன்றுகிறது
உணவகத்தின் கண்ணாடி சுவருக்குள்
யுவதியின் விழிகள்,

சிநேகம் பாவிக்க
மறுக்கின்றன
எனது காலணியோடு
வழுக்கு தரைகள்,

பெரும்பாலும்
வாட்ச்மேனோடே
முடிந்து விடுகின்றன
எனது நேர்முகத்தேர்வுகள்,

ஆனாலும் இந்நகரம்
எனக்கும் வைத்திருக்கிறது
பத்து ரூபாய்க்கு இரண்டு தோசையும்
இராசனாய் நகர்வலம் வர
ஐம்பது ரூபாய் டிக்கெட்டும் ...

Friday, February 27, 2015

குளிர்பெட்டி

என்னைக்காவது குளிர்சாதனப்பெட்டிக்குள்ள (இதுக்கப்புறம் இந்தக்கதைல இத குளிர்பெட்டின்னு சொல்லிக்குவோம்) எட்டி பாத்திருக்கிங்களா?, ம்ம் பாத்திருக்கேனேன்னு சொல்லக்கூடாது. நான் கேக்குறது குளிர்பெட்டி சாத்தி  இருக்கும்போது பார்த்திருக்கிங்களான்னு. சாத்தி இருக்கும்போது எப்படி பாக்க முடியும்னு கேக்க கூடாது. அங்க தான் விசயம் இருக்கு உள்ளுக்குள்ள இருக்க காய்கறி , சாக்லேட்லாம் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கிட்ருக்கு. இல்ல வித்தியாசமா பாக்காதீங்க. லூசு இல்ல. உண்மையாத்தான் சொல்றேன்.

நான் ஒரு தரம் கூட பார்த்ததில்லையேன்னு யோசிக்காதீங்க. நானும் பார்த்ததில்ல என்ன நடக்குதுன்னா நாம குளிர்பெட்டியோட கதவ திறக்கும்போதோ இல்ல அப்படி யோசிச்ச உடனேயோ அதுங்கள்லாம் நாம எப்படி பாக்குறோமோ அப்படி ஆகிடுதுங்க. இப்போ அடுத்த கேள்வி உனக்கெப்படி தெரியும்?. சொல்றேன் நான் ஒரு நாள் கத்திரிக்காய் வேடம் போட்டுட்ருந்தேன். இது கதைங்குறதால ஏன் கத்திரிக்காய் வேடம் போட்டேன்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்ககூடாது.

எங்கம்மா சமையக்கட்டுல இருந்து இன்னும் குளிர்பெட்டிக்குள்ள வைக்காதது அரிசி மூட்டைய மட்டுந்தான். அப்படி ஒரு ஆள் சும்மாருப்பாங்களா , கத்திரிக்காய பார்த்ததும் அய்யோ கெட்டுபோயிடக்கூடாதுன்னு டக்குன்னு தூக்கி குளிர்பெட்டி அலமாரில வச்சிட்டாங்க,  மயக்கம் தெளிஞ்சி (நான் எப்போ மயக்கம் போட்டேன்னு கதைய உன்னிப்பா படிக்கிறவங்க கவனிச்சிருப்பிங்க) நான் எழுந்ததும் செம குளிரு. அப்படியே அரைக்கண்ண திறந்து பாக்குறேன். எல்லா காய்க்கும் கண்ணு முளைச்சிருக்கு அது மட்டுமில்லாம அதுலாம் என்னையே பார்த்துட்டுருக்கு. மறுபடி மயக்கம் போட்டேன் மறுபடி மயக்கம் தெளிஞ்சிடிச்சி. இப்போ கண்ண திறக்காம அப்படியே பயத்துல நடுங்கிட்ருந்தேன் பாக்குறவங்களுக்கு நான் குளிர்ல நடுங்குற மாதிரி தான் தெரியும் ஆனா உண்மைலையே செம பயம் இதுங்கள்லாம் சேர்ந்து என்னை திண்ணுட்டா?. முன்னாடி அதுங்களுக்கு கை,கால்,வாய்லாம் இருக்கும்னு தெரியாது பயந்ததில்லை இப்போ பயமாருக்கு.

நடுங்கிட்ருக்கும்போது அதுங்கள்லாம் பேசுறத கேட்டேன். என்னன்னு பேசுச்சிங்கன்னு கேக்காதீங்க. 10வது படிக்கும்போது எல்லா பாடத்திலையும் 90க்கு மேல இங்கிலிஸ்ல மட்டும் 76. ஆக அதுங்கள்லாம்  இங்கிலிசுல பேசிச்சான்னு யோசிக்கவும் கூடாது. எனக்கு தமிழ் தவிர வேற எதும் புரியாதுங்குறது தான். இந்த பத்தியோட சாராம்சம்.

எவ்ளோ நேரம் தான் அப்படி உக்காந்திட்ருக்குறது. குளிர், பயமா வேற இருக்கு. சரின்னு கதவ திறக்குற மாதிரி மனசுல நினைச்சிக்கிட்டேன். அவ்ளோ தான் எல்லா பொருளும் நாம எப்படி பாக்குறோமோ அப்படி மாறிடிச்சிங்க. ஆனா என்னால வெளிய போக முடியாது ஏன்னு சொல்லுங்க ஏன்னா நான் தான் கத்திரிக்காய மாறி இருக்கேனே. அம்மா வர்ற வரை இப்படியே காத்திருக்க வேண்டியது தான்.

அடுத்த முறை குளிர்பெட்டிய திறந்தா எதாவது ஒரு பொருள் நீங்க வெச்ச இடத்த விட்டு கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்திருக்கும் பாருங்க.